Kochadaiyaan Vimarsanam in Tamil – கோச்சடையான் விமர்சனம் – 52%
கோச்சடையான் விமர்சனம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.
கோச்சடையானை விமர்சிக்க இந்த ஒற்றை வரி போதும்!
”விமர்சிக்க முடியாத பல திரைப்படங்கள் வரும். விமர்சிக்கவேண்டிய படங்கள் அவ்வப்போது வரும். கோச்சடையான் விமர்சிக்கக்கூடாத படம். என்னவோ தெரியவில்லை கோச்சடையானை விமர்சிக்க மனம் ஒப்பவில்லை.
படம் பார்த்து முடிந்தவுடன் நண்பர் ஒருவர் ”படம் எப்படி?” எனக் கேட்டபோது, அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
”நீர் விமர்சிக்க வேண்டாமய்யா, என்ன கதை? அதையாவது சொல்லும்!” தொந்தரித்துக் கேட்டார்.
வழக்கமான ராஜாக்கள் காலத்து கதைதான்.
கலிங்காபுரி, கோட்டைப்பட்டினம் என ஒன்றுக்கொன்று சளைக்காத இரண்டு நாடுகள். மண் சேர்க்கும் அரசர்களின் ஆசைக்கு பலிகடா ஆகும் படைத் தளபதியாக அப்பா கோச்சடையான் (ரஜினி 1). தந்தை ரஜினியின் மரணத்திற்குக் காரணமான இரண்டு ராஜாக்களையும் பலிவாங்கும் படைத்தளபதியாக மகன் ராணா (ரஜினி 2)
இதற்குள் ஒரு காதல். அம்புட்டுதான் கதை. ஆனால்……
தொழிற்நுட்ப புரட்சியின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட கோச்சடையானில் கதை முக்கியமல்ல என்றாலும், அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, குழப்பம் இல்லாத திரைக்கதையை வடித்துக் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். வசனமும் அவரே.
”எதிரிகளை வெல்ல பல வழிகள் இருக்கு. முதல் வழி மன்னிப்பு, நண்பனை எதிரியாக்கிக்கொள்ளாதே, வேஷம் போடுறவனுக்கு பகல் என்ன இரவு என்ன, சூரியனுக்கு முன்னரே எழுந்தால் அந்த சூரியனையே வெல்லலாம்” என வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஏராளம்.
படத்தில் நிஜக் கதைமாந்தர்கள் ஒருவர்கூட கிடையாது. அவர்களின் உருவத் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, கனிணியின் சாகசத்தோடு வென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.
படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் மட்டுமே கதை மாந்தர்களாக காட்சியளிக்கிற கணினி மாந்தர்கள் நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள். அதன்பிறகு அப்படியே நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள் படம் முடியும்வரை. காரணம், தொழிற்நுட்பம்.
இந்தியச் சினிமாவுக்கு இது புதுசு. பட்ஜெட் இருந்தால் அவதாரையும் மிஞ்சக்கூடிய வகையில் நம்மிடம் அறிவும், தொழிற்நுட்பமும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சவுந்தர்யா.
கதைமாந்தர்களின் கண் அசைவு, நடை போன்றவற்றில் துல்லியமான பாவணைக் குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிடுகிறது மனசு. காரணம், படத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டம்.
அரண்மனைக் காட்சிகளிலிருந்து போர்க்கள காட்சிவரை, காட்சிக்கு காட்சி நாம் இதுவரை பார்த்திராதது.
கோச்சடையான் வெளிவருவதில் ஏன் சிக்கல் எனத் தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருந்தால், வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்றாலும், இப்போதும் அதற்குக் குறையிருக்காது என்று நம்பலாம்.
குடும்பத்தோடு பார்த்து மகிழ, முக்கியமாக குழந்தைகளோடு பார்த்து மகிழவேண்டிய படம்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.
கோச்சடையானின் விமர்சனத்திற்கு இந்த ஒற்றை வரிபோதும்.
மதிப்பெண்கள் 52%