மொக்கை கவிதைகள்-Kavithaikal
வாழ்க்கை
பெருக்கினால் கழிக்குது
கழித்தால் வகுக்குது
வகுத்தால் கூட்டுது
கூட்டினால் பெருக்குது
இதுதான் வாழ்க்கை!
நடந்தால் விரட்டுது
விரட்டினால் அமருது
அமர்ந்தால் ஓட்டுது
ஓட்டினால் இழுக்குது
இதுதான் வாழ்க்கை!
வெள்ளைத் தாளிலே
ஏதேதோ எழுதுது
எந்த மொழியென்று
யாருக்கும் தெரியாது
அந்த மொழிபேசும்
ஆட்களே கிடையாது!
நவரசங்கள் தாண்டி
பலரசங்கள் காட்டுது
புதுப்புது ரசங்களை
ஜாடையாய் சொல்லுது
அதைப் புரிந்துகொண்டபோது
எட்டி அழைக்கும் சாவு!
கிழக்கு போனால்
தென் பக்கம் கைகாட்டும்
தென்பக்கம் போனால்
மேற் பக்கம் இழுக்கும்
வடக்கு கிழக்காகும்
கிழக்கு தெற்காகும்
தெற்கு மேற்காகும்
மேற்கு எதுவுமாகும்
இதுதான் வாழ்க்கை!
என் பார்முலா தேடாதே
ஒருபோதும் புரியாது
கற்றுக்கொடுக்கவும் மாட்டேன்
என்கிறது வாழ்க்கை!
மாத்தி யோசி
நூல் அறுபட்டபோது
கீழே விழுந்தது
பட்டம் மட்டுமல்ல
நூலும்தான்!
உண்மையில் அறுபட்டது
நூலல்ல…உறவு!
அடையாளம்
இங்கு குழந்தைகள்
இல்லையென
மவுனமாய்ச் சொல்கிறது
கிறுக்கல் ஏதுமற்ற சுவர்!
காமம்
நான் சைவம் என
பெருமையாகச்
சொல்லிக்கொள்கிறவனும்
சுவைத்துப் பார்க்க விரும்பும்
அசைவம் அதுமட்டுமே!
வழிகாட்டி
துக்கம், இயலாமை,
எதையோ இழந்துவிட்ட தவிப்பு,
எதிர்காலம் பற்றிய பயம்,
நிகழ்கால குழப்பம்,
ஏன் இப்படி என்கிற மன வேதனை ,
நம்பிக்கை தகர்ப்பு
இன்னும் பலவும் ஆட்கொண்டு
தோண்டி மனதை எடுக்கிறதா?
தனி இடம் தேடு
ஓ வென மனம் விட்டு அழு
கண்ணீர் வற்றும் அளவுக்கு அழு
முகம் கழுவு, மொட்டை மாடி செல்
வானம் பார்….அங்கே தெரியும்
எல்லாவற்றுக்குமான விடியல்!
சபலம்
வேர்களின்
ஆழம் பார்த்த மனசு
விழுதுகளையும்
தோண்டிப் பார்க்க
நினைக்கிறது!
பைத்தியக்காரன்
தவறான கேள்விக்கு
விடை சொல்கிறேன்.
தெரியாத பாதைக்கு
வழிகாட்டுகிறேன்.
இல்லாத ஒன்றை
சொந்தம் என்கிறேன்.
போட்டியில் கலவாமல்
வெற்றி பெறுகிறேன்
கேட்காமல் தருகிறேன்
கேளாமல் பிடுங்குகிறேன்
இழக்காமல் அழுகிறேன்.
பெறாமல் சிரிக்கிறேன்.
பயித்தியமடா நீ
என்கிற உலகை
ஞானத்தோடு பார்க்கிறேன்…